January 7, 2019 தண்டோரா குழு
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன் என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
திருவாரூர் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவியது. இத்தொகுதியில் திமுக சார்பில் பூண்டி கலைவாணனும் அமமுக சார்பில் காமராஜும், நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் ஹமீதும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில்,திருவாரூரில் இன்னும் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றும், மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும், எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, திருவாரூரில் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? என்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. பின்னர் இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பினார்.
இந்நிலையில், திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இடைத்தேர்தல் பணிகளை நிறுத்துமாறு தமிழக தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்? என்பதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்,
திருவாரூர் தவிர மற்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் வரை இடைத்தேர்தல் வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டது. கஜா புயல் நிவாரணப்பணிகளை சுட்டிக்காட்டி டிசம்பர் 3 ஆம் தேதி தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா கடிதம் எழுதியிருந்தார். தமிழக அரசிடம் கருத்து கேட்க உள்துறை அமைச்சகமும் அறிவுறுத்தியிருந்தது. நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும் அறிக்கை அளித்து இருந்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.