January 4, 2019
தண்டோரா குழு
திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையொட்டி காலியான திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்க்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் சனவரி 14 ஆம் தேதி எனவும், திருவாரூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை சனவரி 31 ஆம் தேதி நடைபெறும் எனவும் தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இதையடுத்து, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் அமமுக சார்பில் காமராஜும் நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் ஹமீதும் போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் இன்று சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.