January 5, 2019 தண்டோரா குழு
திருவாரூர் இடைத்தேர்தலை சந்திப்பதற்கு திமுக பயப்படுகிறது என்று அதிமுக செய்திதொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த வைகைச்செல்வன் கூறியதாவது,
திருவாரூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை, சந்திக்காமல் தவிர்ப்பதற்கு திமுக முயற்சி செய்துவருகிறது.
திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட்டை சேர்ந்த, நாடாளுமன்ற உறுப்பினர்டி.ராஜா, இந்தியதேர்தல் ஆணையத்திடம் ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில், திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் முன்பாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதையே ஸ்டாலின் கூட கோரிக்கையாக முன்வைத்துள்ளார்.
இதன் மூலம் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயம் திமுக தலைவருக்கு இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு தொகுதியில் தேர்தல் அறிவித்த பிறகு அதை சந்திப்பது தான் ஜனநாயகக்கடமை. அதை தவிர்த்து விட்டுதேர்தலை தவிர்க்க ஆசைப்படுகிறார் ஸ்டாலின். எனவே தான் ஒவ்வொரு காரணமாக தேடிக்கொண்டு உள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திருவாரூர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்து விட்டால் அது நாடாளுமன்ற தேர்தலிலும் தங்கள் கட்சியை வெகுவாக பாதிக்கும் என்ற பயத்தினால் தான் தேர்தலை சந்திப்பதற்கு ஸ்டாலின் அச்சப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.