January 4, 2019 தண்டோரா குழு
நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் அரசியல் கட்சியினர் பங்கேற்க கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையொட்டி காலியான திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்க்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் சனவரி 14 ஆம் தேதி எனவும், திருவாரூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை சனவரி 31 ஆம் தேதி நடைபெறும் எனவும் தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இதையடுத்து, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் பூண்டி கலைவாணனும் அமமுக சார்பில் காமராஜும் நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் ஹமீதும் போட்டியிடவுள்ளனர். இதற்கிடையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரணப் பணிகள் முழுமையடையாத நிலையில் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. பொதுமக்களும் போராட்டத்தை மேற்கொண்டனர். இடைத்தேர்தலை யொட்டி திருவாரூரில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலால் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. திருவாரூரில் இன்னும் புயல் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. மக்கள் இயல்பு நிலைக்கு இன்னும் திரும்பவில்லை. இந்த சூழ்நிலையில் தேர்தல் நடைபெற்றால் அரசு நிர்வாகம் தேர்தலில்தான் கவனம் செலுத்தும். மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இதை கருத்தில் கொண்டு தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், நிவாரண பணிகளில் எந்த அரசியல் தொடர்பும் இருக்க கூடாது, தேர்தல் நடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.