July 13, 2018
தண்டோரா குழு
திருப்பூர் மாவட்டம் அருகே பூமலூர் முன்னாள் ஊராட்சித்தலைவரும் திமுக பிரமுகருமான செந்திலின் மனைவி சிவரஞ்சனி.இவருக்கு 5 வயதில் அர்ஷத் என்ற மகனும் அர்ஷிதா என்ற 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் சிவரஞ்சனிக்கும் அவரது கணவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.இதனால் விரக்தியடைந்த சிவரஞ்சனி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.
அப்போது தனக்கு பிறகு தனது குழந்தைகள் தவிக்க கூடாது என்று எண்ணி சிவரஞ்சனி வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் இரண்டு குழந்தைகளையும் அமுக்கி கொன்றுள்ளார்.பின்னர்,வீட்டில் இருந்து மண்ணெண்ணெயை ஊற்றி தானும் தீ வைத்து கொளுத்திக் கொண்டார்.இதில் சிவரஞ்சனி உடல் முழுவதும் கருகிய நிலையில் பலத்த காயமடைந்தார்.
அதிகாலை நடந்த இச்சம்பவத்தில் தீக்காயங்களுடன் சிவரஞ்சனி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.