January 7, 2019 தண்டோரா குழு
திருப்பூரில் மீண்டும் அமைக்கப்படவுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை கழட்டி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட காளிபாளையம் பகுதியில் அரசு மதுபானக்கடை இயங்கி வந்தது. நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை அகற்ற நீதிமன்ற உத்தரவிட்டதையடுத்து இந்த மதுக்கடை அகற்றப்பட்டது. இதையடுத்து அதே பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை மீண்டும் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த டாஸ்மாக் கடையினால் அப்பகுதி மக்கள் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகினர். இதையடுத்து, இந்த கடையை அகற்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பின்னர், மாவட்ட நிர்வாகம் அந்த மதுபானக்கடையை அகற்றியது.
இந்நிலையில் அகற்றப்பட்ட மதுக்கடையை மீண்டும் அதே பகுதியில் பகுதியில் திறக்க டாஸ்மாக் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதனால் மீண்டும் இங்கு மதுக்கடையை திறக்கபட்டால் இப்பகுதி மக்கள் பெரும் இடையூறாக இருக்கும் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் தங்கள் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை கழட்டி எறிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.