March 3, 2018
தண்டோரா குழு
திரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. மாணிக் சர்க்கார் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார்.
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து சட்டசபைகளுக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது.திரிபுராவில் கடந்த மாதம் 18ம் தேதியும், நாகலாந்து, மேகாலயாவில் 27ம் தேதியும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
இந்த மாநிலங்களில் தலா 60 தொகுதிகள் உள்ளன.திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் இறந்ததால் ஒரு தொகுதியிலும், மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கொல்லப்பட்டதால் ஒரு தொகுதியிலும், நாகலாந்தில் என்டிபிபி கட்சி தலைவர் நெபியு ரியோ போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளதால் ஒரு தொகுதியிலும் தேர்தல் நடைபெறவில்லை. இதனால், இம்மாநிலங்களில் தலா 59 தொகுதிளில் மட்டுமே தேர்தல் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில்,இன்று காலை 8 மணிக்கு இந்த மாநிலங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை தொடங்கியது. கடந்த தேர்தலில் 49 இடங்களைக் கைப்பற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இன்று காலை தொடங்கிய ஓட்டு எண்ணிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பாஜக வேட்பாளர்களும் மாறி மாறி முன்னிலையில் இருந்தனர்.
ஆரம்பத்தில் ஆட்சி அமைக்க தேவையான 30 இடங்களை தாண்டி முன்னணி வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு பாஜக நெருக்கடி கொடுத்தது. தொடர்ந்து முன்னிலை வகித்த பாஜக 40 இடங்களை பிடித்து வெற்றி அடைந்துள்ளது. திரிபுரா சட்டசபையில் கடந்த முறை ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத பாஜக இந்த முறை ஆட்சி அமைக்கிறது.
இதன் மூலம் திரிபுராவில் 25 ஆண்டுகளாக நடந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.