April 29, 2019 தண்டோரா குழு
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 40 பேர் பாஜகவுடன் தொடர்பில் இருக்கின்றனர் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு, பிரதமர் நரேந்திரமோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் செராம்பூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்கள் மக்களை வாக்களிக்க விடமால் தடுக்க முயற்சிப்பதுடன், பாஜக தலைவர்களையும் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்து பாஜக தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்துகிறார்கள். மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது அனைத்து இடங்களிலும் தாமரை மலரும்.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 40 பேர் பாஜகவுடன் தொடர்பில் இருக்கின்றனர். மக்களவை தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் கட்சியில் விலகி பாஜவில் இணைய போகிறார்கள். மம்தா அரசியலில் சறுக்கப்போகிறார்.மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு முதலமைச்சராக இருக்க முடியாது. மம்தாவால் கனவில் கூட பிரதமர் ஆக முடியாது. குறைந்த அளவிலான சீட்டுகளை வைத்துக் கொண்டு டெல்லிக்கு அவரால் வர முடியாது. அனுமதி முதல் சேர்க்கை வரை அனைத்து விதத்திலும் மம்தாவின் அரசால் மக்கள் பணத்தை இழக்கிறார்கள். மம்தாவிற்கு தோல்வி பயம் வந்து விட்டது அதனால் தான் அவருக்கு அடிக்கடி கோபப்படுகிறார்.
என்னை மட்டும் அவதூறாக பேசி வந்த எதிர்க்கட்சிகள், தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களையும் குறை கூறி பேசி வருகிறார்கள். இந்த தேர்தலில் தோல்வி கிடைத்துவிடும் என எதிர்கட்சிகள் அஞ்சுகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.