March 5, 2019
திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு நிறைவு பெற்றதாகவும் திமுக 20 தொகுதியில் போட்டியிடவுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தமிழகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ்,மதிமுக, சிபிஐ, சிபிஎம், ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை அறிவாலயத்தில் இன்று வைகோவுடன் கூட்டணி பேச்சு முடிந்த பின்னர் திமுக தலைவர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீட்டை முடித்துள்ளோம். அதன்படி காங்., 10 , மதிமுக 1 , மா.கம்யூ., இ.கம்யூ, விடுதலை சிறுத்கை கட்சிகள் தலா 2 தொகுதிகளும், கொ.ம.தே.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , ஐஜேகே கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி புதுச்சேரி உள்ளிட்ட மொத்தம் 40 தொகுதிகளில் 20 தொகுதிகள் கூட்டணியினருக்கும், திமுக வுக்கு 20 தொகுதிகளும் பகிரப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி ஒதுக்கீடு என்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.
திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு சீட் தர இயலவில்லை; தேர்தலில் ஆதரவை கோரியுள்ளோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் அறிக்கை அறிவிக்கப்படும். தமிழகத்தில் காங்., தலைவர் ராகுல் பங்கேற்கும் கூட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் எனக் கூறினார்.
மேலும், திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு இடம் இல்லை.கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு முடிந்து விட்டது. இனி, யாருக்கும் எங்கள் கூட்டணியில் இடம் இல்லை என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்நிலையில் தனித்து நிற்கும் தேமுதிக , அதிமுக கூட்டணியில் தான் இணைய வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
தொகுதி பங்கீடு விவரம்
தி.மு.க. : 20 தொகுதி
காங். : 10 தொகுதி
விசிக, : 2 தொகுதி
மா.,கம்யூ, : 2 தொகுதி
இ.,கம்யூ : 2 தொகுதி
மதிமுக. : 1 தொகுதி
ஐ.ஜே.கே. : 1 தொகுதி
கொ.ம.தே.க., : 1 தொகுதி