February 23, 2019 தண்டோரா குழு
திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று ஊராட்சி சபைக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் மாநில கட்சிகளுக்கிடையே கூட்டணி அமைப்பதில் போட்டி நிலவி வருகிறது. மேலும் ஒவ்வொரு கட்சியும் வேட்பாளா்களிடம் விருப்ப மனுக்களை பெறும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில் திமுக தலைவா் ஸ்டாலின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சுற்றுப்பயணமாக கிராமசபைக் கூட்டங்களை கூட்டி வருகிறார். அதில் அப்பகுதி பொதுமக்களை நேராக சந்தித்து அவா்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ராஜாஜி நினைவு இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு அங்கு ஊராட்சி சபை மற்றும் வாக்கச்சாவடி முகவா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் வணக்கம் கூறி உரையைத் தொடங்கி திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.