June 24, 2021
தண்டோரா குழு
கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவர்களது உறவினர்கள் என தொடர்ந்து தினமும் சுமார் 300 பேருக்கு உணவு வழங்கி வரும் கோவை மாவட்ட அரிமா 324 பி.1 மற்றும் ஃபேரா (FAIRA) அமைப்பினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூரில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு தினமும் கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி பல்வேறு சிகிச்சை பெறுவதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த மே மாதம் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து பரவி வந்த நிலையில்,தமிழக அரசு நோய் தொற்றை கட்டுபடுத்த முழு ஊரடங்கு பிறப்பித்தது. இந்நிலையில், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள்,சுகாதார ஊழியர்கள்,செவிலியர்கள்,ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவர்களது உறவினர்கள் என தொடர்ந்து தினமும் சுமார் 300 பேருக்கு உணவு வழங்கும் பணியை கோவை மாவட்ட அரிமா 324 பி.1 மற்றும் ஃபேரா (FAIRA) அமைப்பினர் முன்னெடுத்து செய்து வருகின்றனர்.
மேலும்,பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 24 மணி நேரம் இலவச முக கவசங்கள் மற்றும் கபசுரகுடிநீர் வழங்குவதற்கான முகாம் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் 240 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை தத்தெடுத்து பராமரிப்பது மற்றும் செவிலியர்களுக்கு ஊதியம் வழங்கும் பணியையும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து 46 ஆவது நாளாக மருத்துவமனை வளாகத்தில் உணவு வழங்கும் பணி ,கோவை மாவட்ட அரிமா சங்கம் 324 பி.1 மாவட்ட பி.ஆர்.ஓ. அரிமா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னால் மாவட்ட ஆளுநரும், சர்வதேச இயக்குனர் ஒப்புதல் மதனகோபால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்களை வழங்கினார். .
இதில் நேரு நகர் அரிமா சங்க தலைவர் நேரு நகர் நந்தகுமார், இ.எஸ்.ஐ.டீன் மருத்துவர் ரவீந்திரன், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் மருத்துவர் தமிழ்செல்வன் மற்றும் அரிமா சங்கத்தின் நக்கீரன்,மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.