February 2, 2019 தண்டோரா குழு
தாய்லாந்தில் இருந்து சிங்க குட்டியுடன் சென்னைக்கு வந்த பயணியிடம் இருந்து விமான நிலைய அதிகாரிகள் சிங்க குட்டியை பறிமுதல் செய்தனர்.
வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வரும் பயணிகளை அவ்வப்போது விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அப்போது ஏராளமான கடத்தல் தங்கக் கட்டிகள் சிக்கும். ஆனால், இன்று ஒரு பயணி சிங்க குட்டியுடன் வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, இன்று அதிகாலை சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் திடீரென்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது தாய்லாந்தை சேர்ந்த பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் சிங்கக்குட்டி இருப்பதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவரிடம் இருந்து சிங்கக்குட்டியை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சிங்கக்குட்டியுடன் தாய்லாந்து பயணியை திருப்பி அனுப்ப விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இச்சம்பவம் அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.