December 10, 2018 தண்டோரா குழு
உலக அதிசயங்களில் ஒன்றான உ.பி., மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் நுழைவுக் கட்டணம் அதிரடியாக ரூ.200 உயர்த்தப்பட்டுள்ளது.
உ.பி., மாநிலம், ஆக்ராவில் உள்ள 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மஹாலை காண உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வந்து செல்கின்றனர். இதுவரை தாஜ்மஹாலை காண ரூ.50 நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆனால் இன்று நுழைவுக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ரூ.250, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரூ.1,300 செலுத்த வேண்டும். சார்க் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ரூ.540 க்கு பதிலாக ரூ.740 நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
ரூ.50 டிக்கெட் பெறும் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். அதே சமயம் அவர்கள் தாஜ்மஹாலின் வெளிப்புறம் மட்டும் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த கட்டண உயர்வு இன்று (டிச.,10) முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து ஆக்ராவில் ஆய்வு நடத்திய இந்திய தொல்லியல் துறை தலைவர் வசந்த் ஸ்வர்னாகர் கூறுகையில்;
மாசுபாடுகளில் இருந்து தாஜ்மஹாலை பாதுகாப்பதற்காக தாஜ்மஹாலை காண வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டு இதற்காக நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.