January 3, 2019 தண்டோரா குழு
தமிழ் மொழிக்காக கருணாநிதி ஆற்றிய தொண்டு மகத்தானது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம் கூறியுள்ளார்
தமிழக சட்டப்பேரவை நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவை 8ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இன்றைய தினம் மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், மறைந்த 12 அவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பின்னர் கருணாநிதியின் இரங்கல் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் பேசுகையில்,
“இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி. 13 வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்காற்றியவர், 17 வயதில் தமிழ்நாடு மாணவர் மன்ற தலைவர் ஆனார். எழுத்து, இலக்கியம், திரைத்துறை என அனைத்திலும் சிறந்து விளங்கியவர், பன்முக தன்மை கொண்டவர்.ஐந்து முறை முதல்வராக இருந்த பெருமைக்குரிய கருணாநிதி தமிழகத்துக்கு சிறப்பான திட்டங்களை அளித்தவர்.தமிழ் மொழிக்காக கருணாநிதி ஆற்றிய தொண்டு மகத்தானது. கருணாநிதியின் பன்முகத்தன்மையால் சமூக விழிப்புணர்வை தன்னுடைய எழுத்தின் மூலமாக ஏற்படுத்தியவர். பராசக்தி படம் மூலம் தன்னை பகுத்தறிவாளர் என்பதை உலகிற்கு உணர்த்தினார்.
சிறப்பான திட்டங்களை தமிழகத்திற்கு அளித்த கருணாநிதியை அதிமுகவும் சில நேரங்களில் பின்பற்றியும் உள்ளது, தேவையெனில் எதிர்த்து உள்ளது. தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களில் வென்றவர். அவருடைய மறைவிற்கு தமிழக அரசு சார்பில் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
மேலும், கருணாநிதியின் சாதனை இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும்” என்று கலைஞர் மு.கருணாநிதிக்கு சட்டப்பேரவையில் முதல்வர் புகழாரம் சூட்டினார்.