March 29, 2021
தண்டோரா குழு
தமிழ்நாடு முன்னேற மோடி, ஈபிஎஸ் என்ற டவுள் இன்ஜின் தேவை என பாஜக அகில இந்திய பொதுச்செயலாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார்.
கோவை ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கோவை தெற்கு தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சிடி ரவி வெளியிட்டார். அதில் தொகுதி முழுவதும் பீரி வை-பை வசதி, திருவள்ளுவர் பெயரில் ஒரு நூலகம், மத்திய சிறைச்சாலை இடமாற்றம் செய்யப்பட்டு, உயிரியல் பூங்கா அமைக்கப்படும், கோவையில் ஐஐஎம் அமைக்கப்படும் ஆகிய வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக அகில இந்திய பொதுச்செயலாளர் சிடி ரவி,
திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்காக தினமும் பொய்களை சொல்லி வருகிறார். ஸ்டாலின் ஆத்திகரா? நாத்திகரா? எனக் கேட்ட அவர், இந்து கடவுள்களை மட்டுமே ஸ்டாலின் இழிவுபடுத்துகிறார் எனத் தெரிவித்தார். வேல் விவகாரத்தில் ஸ்டாலின் நாடகமாடி வருகிறார், நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு தடை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது எனவும் அவர் கூறினார்.
தமிழ்நாடு முன்னேற மோடி, ஈபிஎஸ் என்ற டவுள் இன்ஜின் தேவை எனவும், கட்டபஞ்சாயத்து, மின்வெட்டு வேண்டுமென்றால் திமுகவிற்கு வாக்களியுங்கள் எனவும் அவர் தெரிவித்தார். முதலமைச்சர் தாயார் குறித்து ஆ.ராசா இழிவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்த அவர், பெண்களை இழிவாக பேசுவது தான் திமுகவின் டிஎன்ஏ எனத் தெரிவித்தார். கோவை தெற்கு தொகுதியில் பீப்பிள் ஹீரோ, பீலிம் ஹீரோவுக்கும் போட்டி நடப்பதாகவும், பீப்பிள் ஹீரோ வேண்டுமென்றால் மண்ணின் மகள் வானதி சீனிவாசனுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆளக்கூடாது என்ற ராகுல்காந்தி கருத்து தவறானது. ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளை புரிந்து கொள்ளாமல் பேசுகிறார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நில அர்ஜிதம் முடிந்த பின்னர் துவக்கப்படும் எனவும், களநிலவரத்திற்கும்,கருத்துக்கணிப்புகளுக்கும் வித்தியாசம் உள்ளது. நாங்கள் கள நிலவரத்தை நம்புகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.