April 12, 2019
தமிழக மக்களை அன்பால் தான் வெல்ல முடியும், வெறுப்பு அரசியலால் வெல்ல முடியாது என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிருஷ்ணகிரி வந்தடைந்தார்.அங்கு கிருஷ்ணகிரிமக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார், ஒசூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சத்யா, தருமபுரி மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மணி, அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, பொதுமக்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி,
தமிழர்களின் குரல் மத்தியில் ஓங்கி ஒலிக்க வேண்டும். பாஜக அரசு தமிழர்களின் குரலை புறக்கணித்து வருகிறது.அதிமுகவை கட்டுப்படுத்துவது போல தமிழகத்தை கட்டுப்படுத்த முடியும் என பிரதமர் மோடி நினைக்கிறார்.தமிழக மக்களை அன்பால் தான் வெல்ல முடியும், வெறுப்பு அரசியலால் வெல்ல முடியாது. வெறுப்பு அரசியலை திணிப்பதன் மூலம் தமிழகத்தில் பாஜக ஆட்சி செலுத்த முடியாது.விவசாயிகள் போராட்டம் நடத்தும்போது பிரதமர் மோடி ஒருவார்த்தைக்கூட சொல்லவில்லை.
வறுமைக்கு எதிராக ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்.அம்பானி, நீரவ் மோடி உள்ளிட்ட 15 நபர்களுக்காகவே பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார்.இந்தியா பல்வேறு மாநிலங்கள், கலாச்சாரங்களால் உருவானது. நாட்டில் ஏழ்மையை ஒழிக்க அதிரடி திட்டங்களை கொண்டுவர எண்ணி உள்ளேன், அதுதான் ஆண்டுக்கு ரூ.72,000 திட்டம்.
தமிழர்களுக்கும் எனக்கும் இடையே உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது. தமிழகம் தமிழரால் ஆளப்படும், தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார் .
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்வோம். விவசாயிகளின் அச்சத்தை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு சிறப்பு திட்டங்கள் கொண்டுவரப்படும். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும் ராகுல்காந்தி உறுதியளித்தார்.