December 24, 2019
தமிழக சிறுபான்மையினருக்கு பிரச்சினை வந்தால், தங்களுக்கு வந்த பிரச்சினையாக கருதி தமிழக அரசு துணை நிற்கும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
ஜெயலலிதா போலவே, எடப்பாடி பழனிச்சாமியும் சிறுபான்மையினர் நலனில் செயல்படுவதாகவும், முத்தலாக் சட்டத்தின் போது எதிர்ப்பு தெரிவித்தது, ஹஜ் பயணத்திற்காக தமிழக அரசு ரூ.6 கோடி வழங்கியது என சிலவற்றை சுட்டிக்காட்டியவர், தமிழகத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களான சிறுபான்மையினருக்கு இச்சட்டத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை என முதல்வர் கூறியுள்ளதையும் குறிப்பிட்டார். இந்தியாவிலேயே அதிகளவில் தமிழக உள்ளாட்சித் துறை 99 விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளதாகவும், அதற்கு முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி தெரிவித்தவர், குடிமராமத்து, வண்டல் மண் எடுப்பது உள்ளிட்ட தமிழக அரசின் பல திட்டங்கள் கிராமங்களுக்கு சென்று சேர்ந்துள்ளதுடன், மழையும் பெய்ததால் அனைத்து குளங்களும் நிரம்பி உள்ளதை குறிப்பிட்டார்.
செய்த திட்டங்களுக்காக, அனைத்து துறைகளிலும் அதிகமான விருதுகள் பெற்றுள்ளதாலும், அதிமுகவிற்கு,உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் ஆதரவு சிறப்பாக உள்ளதாகவும், குறிப்பாக கோவையில் 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகால வளர்ச்சி வழங்கப்பட்டுள்ளதாக கூறியவர், ஆத்துப்பாலம் மேம்பாலம் மற்றும் 9.5கி.மீ., தொலைவிலான அவினாசி சாலை மேம்பாலத்தின் 2வது கட்ட பணிகள் துவங்கப்பட உள்ளதகவும், விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு ரூ.75 கோடியை தொடர்ந்து, அடுத்தக்கட்ட தொகை வழங்கவும் ஒப்புதல் ஆகியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.