June 28, 2019 தண்டோரா குழு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 4 நாட்களுக்கு விவாதம் நடைபெற்ற நிலையில், மக்களவை தேர்தல் காரணமாக, ஒரு மாதம் வரை நடைபெறும் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பிறகு, இன்று காலை சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது.
அப்போது, சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ், விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும்,முன்னாள் எம்எல்ஏக்கள் 8பேரின் மறைவுக்கும் பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர், தமிழக சட்டப்பேரவை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திங்கள் முதல் ஒவ்வொரு துறைக்கான மானியக் கோரிக்கை அவையில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெறும். இந்த விவாதங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுவார். வரும் ஜூலை 30-ஆம் தேதி வரை இந்தக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது.