February 12, 2018
தண்டோரா குழு
தமிழக சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்த ஜெயலலிதாவை கவரவிக்கும் விதமாக அவரின் உருவ படத்தை சட்டப்பேரவையில் திறக்க உள்ளதாக தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. இதையடுத்து,படத்திறப்பு விழா இன்று (பிப்.,12) சட்டசபை வளாகத்தில் நடந்தது.
சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட 7 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட ஜெ.,வின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் திறந்து வைத்தார்.
இந்த விழாவை ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்துள்ளனர். திமுக கூட்டணி கட்சியான காங்.,ம் இந்த விழாவை புறக்கணித்துள்ளது.அதைப்போல் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் சுயேட்சை எம்எல்ஏ தினகரனும் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை.
இதற்கிடையில், திமுக இவ்விழாவை புறக்கணித்ததால், திமுக எம்.எல்.ஏ.,க்களின் இருக்கைகள் அதிமுக எம்.பி.,க்கள் , நீதிபதிகள், அதிமுக நிர்வாகிகள் ஆகியோருக்கும் திமுக எம்.எல்.ஏ.,க்களின் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே தமிழக சட்டசபையில் ராஜாஜி, காமராஜர், அண்ணா, பெரியார் உள்ளிட்ட 10 தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது. தற்போது 11வது படமாக ஜெ., படம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.