February 5, 2019 தண்டோரா குழு
குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்று கோப்பையுடன் திரும்பிய தமிழக என் சி சி மாணவர்களுக்கு கோவை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு கலாச்சார மற்றும் திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. நாடு முழுவதிலும் இருந்து 16 இயக்குனரகங்களை சேர்ந்த தேசிய மாணவர் படையினர் போட்டியிட்டனர். இதில் தமிழகம், புதுவை, மற்றும் அந்தமான் நிகோபார் தேசிய மாணவர் படை இயக்குனரகத்தை சேர்ந்த மாணவர்கள் முதல் பரிசை பெற்றனர்.
மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் தமிழக அணி அதிக பதக்கங்களை பெற்றது. இந்த முகாமில் பங்கேற்று கோவை திரும்பிய தேசிய மாணவர் படையினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை ரயில் நிலையத்தில் என் சி சி மாணவர்கள் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர். அனைத்து பொதுமக்கள் மாணவர்கள் என அனைவரும் என் சி சி குழுவினரை உற்சாகமாக வரவேற்றனர்.