June 17, 2021
தண்டோரா குழு
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மிகப்பெரிய தோல்வியை கண்டுள்ளது என்று பா.ஜ.க சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தில் வேலூர் இப்ராஹிம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க தமிழகத்தில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.பா.ஜ.க வெற்றி பெறாது என்று பலரும் கூறிய நிலையில் வெற்றி பெற்றுள்ளோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழக அரசு கொரோனாவை தவறான முறையில் கையாண்டுள்ளது. அரசு தோல்வி கண்டுள்ளது. மது ஒழிப்பே முதல் கையெழுத்து என்று திமுக அரசு கூறியது. இன்று மதுக்கடையை திறந்து விற்பனையை ஊக்குவிப்பது துரோகம்.
திமுக துரோகம் இழைக்கும் கட்சியாக உள்ளது.எனக்கு பா.ஜ.க தலைமை வழங்கிய பொறுப்பை உணர்ந்து, கட்சியின் வளர்ச்சிக்காக நிர்வாகிகளிடம் கலந்துரையாடி வருகிறேன். திமுக கடந்தகால ஆட்சியில் பின்னடைவை சந்திக்கும் போது, அவர்கள் சில சர்ச்சை பேச்சை பேசி திசை திருப்புவார்கள். அந்தவகையில் தான் கொரோனா விஷயத்தில் அரசு தோற்றுப்போன நிலையில், ஒன்றிய அரசியல் பேசுகின்றனர். இதனால் திமுக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.