November 30, 2020 தண்டோரா குழு
கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளித்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பிரதமர் மோடி,எம்.ஜி.ஆர்.வேடமிட்டு வந்து மேடை நடன கலைஞர்கள் அசத்தினர்.
அண்மையில் தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வில் கலாச்சார நிகழ்ச்சிகள் எனப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்திருந்தது.இந்நிலையில் பர மாதங்களாக கலைநிகழ்ச்சிகள்,மற்றும் மேடை நிகழ்ச்சிகள் இல்லாமல் வாழ்வாதரமின்றி தவித்து இருந்த கலைத்துறையினர் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதற்கு அரசிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் மற்றும் இசை கலைஞர்கள் நல சங்கத்தினர் எம்.ஜி.ஆர்., பிரதமர் மோடி,வேடமிட்டும், கரகம்,பொய்க்கால் குதிரை வேடமணிந்தபடி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து, கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளித்த தமிழக அரசிற்கு நன்றி கூறும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் பூங்கொத்துகள் அளித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் அஜீத் ராஜா,
எங்களை போன்ற கலைத்துறையினர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள தளர்வுகளில் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்ததால்,அனைத்து மேடை மற்றும் இசைகலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறிய அவர்,கொரோனா கால ஊரடங்கு நேரத்திலும் மேடை கலைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் முக்கிய பங்காற்றியதாக அவர் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திடீரென எம்.ஜி.ஆர்.மற்றும் மோடி இணைந்து வந்ததை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.