May 19, 2021
தண்டோரா குழு
தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு கோவை மாவட்ட தொழில் அமைப்புகளின் கூட்டுக்குழு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கோவை மாவட்ட தொழில் வணிக அமைப்புகளின் கூட்டுக்குழு சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு, நோய்த் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை விரைந்து எடுத்து வருவது பாராட்டுக்கு உரியதாகும்.அதே நேரத்தில் கோவை மாவட்டத்தில் இந்த நோய்த்தொற்றுப் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.
கடந்த சில தினங்களாக இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000த்தை கடந்திருப்பது கவலை அளிக்கிறது. இந்த கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் விதமாக மாவட்ட நிர்வாகம் இன்னும் கூடுதல் பலம் பெற்று சிறப்பாக செயல்படும் வகையில் உயர் அதிகாரிகள் குழு ஒன்றை அமைப்பது நிலைமையை எதிர் கொண்டு மேம்படுத்த உதவும் என்பது எங்கள் தாழ்மையான கருத்து.
இது தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கோவை மாவட்ட தொழில் வணிக அமைப்புகளின் கூட்டுக்குழு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கிட தயாராக உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.