January 7, 2019 தண்டோரா குழு
பேருந்து மீது கல்வீசிய வழக்கில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணன் ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்திரவிட்டுள்ளது.
பாலகிருஷ்ணன் ரெட்டி தமிழகத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார். இவர் 1998-ல் தமிழக கர்நாடக எல்லையில் நடைபெற்ற போராட்டத்தின் போது பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் 108 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 108பேரில் 16பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. மேலும், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் அதிரடி உத்திரவிட்டது.
3 ஆண்டு சிறை என்பதால் பாலகிருஷ்ண ரெட்டியின் பதவி பறிபோக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால் பதவி இழக்க நேரிடும். மேல்முறையீட்டில் தண்டனை உறுதியானால் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.