January 22, 2019 தண்டோரா குழு
தமிழகத்தில் காலியாகவுள்ள 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து வரும் 24 ஆம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று திருமங்கலத்தைச் சேர்ந்த தாமோதிரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார் இவ்வழக்கு தொடர்பான விசாரணையின் போது நீதிபதிகள், 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும்? என்பதை இந்த நீதிமன்றம் அறிய விரும்புகிறது” என்றனர்.
இதையடுத்து, இந்த வழக்கு குறித்து இந்திய தலைமை தேர்தல் கமிஷன், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோர் பதில் அளிக்கும்படி, நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்ய ஏப்ரல் வரை அவகாசம் உள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24-க்குள் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.