September 5, 2019 தண்டோரா குழு
தமிழக பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதில் எந்த இழுபறியும் இல்லை அகில இந்திய தலைமை முடிவு செய்யும் தலைவரை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
காங்கிரஸ் ஊழல்களை மறைக்க பொருளாதார வீழ்ச்சி என பொய் கூறுகிறது. உலகில் அதிக வளர்ச்சி உள்ள 5 நாடுகளில் சீனாவை இரண்டாவது இடத்திற்கு தள்ளி, இந்தியா முதலிடத்தில் உள்ளது.பொருளாதாரம் பற்றி மக்கள் பீதியடைய தேவையில்லை. பொருளாதாரம் பற்றி பேசும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த கல்லூரியில் பொருளாதாரம் படித்தார். ப.சிதம்பரத்திற்கு ஏற்பட்ட நிலை, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராபர்ட் வதோரா ஆகியோருக்கும் வரும்.தமிழக பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதில் எந்த இழுபறியும் இல்லை. தலைவரை அகில இந்திய தலைமை முடிவு செய்யும். அக்கட்டளையை தொண்டர்கள் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். பாஜக தலைவராக 15 பேரை ஊடகங்கள் அடையாளம் காட்டியுள்ளன எனவும், தலைவர் பொறுப்பிற்கு என்பெயர் அடிபடுவது எனக்கு வலிக்கிறது எனவும் அவர் கூறினார்.
மேலும், தமிழக மக்கள் மிகப்பெரிய மாற்றத்திற்கு தயாராகி கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அதிகளவில் பாஜகவில் இணைந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 4 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருவதை தவிர்க்கமுடியாது. சிவகங்கை, தூத்துக்குடி, நீலகிரி, மத்திய சென்னை தொகுதிகளுக்கு தேர்தல் விரைவில் வரும் எனவும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.