January 10, 2019
தண்டோரா குழு
எங்கள் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் கூட்டணிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து தமிழக பாரதீய ஜனதா கட்சி பிரமுகர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார்.
அப்போது பேசிய மோடி,
தமிழகத்தை பொறுத்தவரை வரும் நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாதையை பின்பற்றுவோம். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே வாஜ்பாய் வெற்றிகரமான கூட்டணி ஆட்சியை நடத்திக் காட்டியவர் எனக்கூறி 1990-களில் முன்னாள் பிரதம மந்திரி அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு உதவிய “வெற்றிகரமான கூட்டணி அரசியலை” நினைவுகூறும் விதமாக பேசினார்.
மேலும், பா.ஜ.க., தனது சொந்த பலத்துடன் வெற்றி பெற்றாலும் கூட, நமது கூட்டாளிகளுடன் அரசாங்கத்தை நடத்த நாங்கள் விரும்புகிறோம். 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அரசியலில் ஒரு புதிய கலாச்சாரத்தை கொண்டுவந்த தத்ரூபமான தலைவர் அடல் ஜி, வெற்றிகரமான கூட்டணி அரசியலை நடத்தினார். பிராந்திய கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். எனவே பழைய நண்பர்களை வரவேற்கத் தயாராக உள்ளோம் என்றார்.
அப்போது தொண்டர் ஒருவர் அ.தி.முக மற்றும் ரஜினிகாந்துடன் பாரதீய ஜனதா கூட்டணி அமைக்குமா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மோடி, மக்களுடன் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். இதுவே வெற்றிக் கூட்டணி. தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. தமிழகத்தில் நம்பிக்கையின் அடிப்படையில் பாஜக கூட்டணி அமைக்கும் என்றார்.