January 24, 2019 தண்டோரா குழு
தமிழகத்தில் முதலீட்டை விதைக்கும் முதலீட்டாளர்கள், சிறந்த அறுவடையை பெறுவார்கள் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறை தொழில் கொள்கை 2019 என்ற விளக்க கையேட்டை வெளியிட்டு பேசினார். முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் என சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. இதில் துணை ஜானதிபதி வெங்கையா நாயுடு கலந்த கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,
தமிழ்நாடு தொழில்திறன் மிக்க தொழிலாளர்கள் நிறைந்த மாநிலம், அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழும் தமிழ்நாடும் மனதுக்கு நெருக்கமானவை என எப்போதும் சொல்வேன். சென்னையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3.42 லட்சம் கோடி முதலீடு உறுதியானது மகிழ்ச்சியளிக்கிறது. முதலீட்டாளர் மாநாடு, முதலீட்டாளர்களுக்கும், வாய்ப்புகளுக்கும் புதிய வாசல்களை திறந்துள்ளது. நாகையில், பெரிய அளவில் முதலீடு செய்ய நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரும்படி முதல்வரை கேட்டு கொண்டுள்ளேன்.
தமிழகத்தில் முதலீட்டை விதைக்கும் முதலீட்டாளர்கள், சிறந்த அறுவடையை பெறுவார்கள். முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. சாலை, வான்வெளி, துறைமுக போக்குவரத்து வசதிகளை தமிழகம் பெற்றுள்ளது. ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இந்தியா பொருளாதார வளர்ச்சி பாதையில் செல்கிறது. இந்திய வளர்ச்சியை இன்றைய இளைஞர்கள் வழிநடத்தி வருகின்றனர். பொருளாதாரத்தின் வளர்ச்சியானது 7.2, 7.3, 7.6 சதவிகிதம் என்ற வேகத்தில் வளர்ந்து கொண்டு செல்கிறது. உலக வளர்ச்சிக்கு இந்தியாவின் வளர்ச்சி உதவிகரமாக இருக்கும் என்றும் உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்பதுதான் இந்தியக் கொள்கை. மத்திய, மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வளர்ச்சி தரும்.
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தாராளமயமாக்கல் வேகமெடுத்தது. மாற்று கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆட்சியிலும் தாராளமயமாக்கல் நடந்தது. இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்வதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள் சிறந்த பலனளிக்கும் என உலகிற்கு கூறுகிறேன். விவசாய துறையில் நிலவும் சில பிரச்சனைகள் உண்மைதான், அதற்கு விரைவில் தீர்வு காணப்படும். மாநிலம் முழுவதும் மட்டுமின்றி நாடு முழுவதும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றார்.
மேலும் வெற்றிகரமாக உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்திய முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.