March 26, 2019 தண்டோரா குழு
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் 39 தொகுதிகளில் இதுவரை 1000 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் கடந்த 18-ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகள், 4 மாநில சட்டசபைக்கு முதற்கட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 18-ல் துவங்கியது. தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18-ல் தேர்தல் நடைபெற உள்ளது. மே 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ந்தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடு விதித்திருந்தது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் 39 தொகுதிகளில் இதுவரை 1000 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்; ஆண்கள் – 878, பெண்கள் – 120, 3-ம் பாலினத்தவர் 2 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் பற்றி நாளை பரிசீலனை செய்யப்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் மார்ச் 29ந்தேதி வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.