January 17, 2019 தண்டோரா குழு
தமிழகத்தில் பா.ஜ.க.வை காலுன்ற அ.தி.மு.க.வினர் சுமந்து செல்ல மாட்டோம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, கோவை அண்ணாசிலை பகுதியில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஆடிட்டர் குருமூர்த்தி பா.ஜ.க. தமிழகத்தில் காலுன்ற அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டுமென கூறியிருப்பது கேலியாக உள்ளது. குருமூர்த்தி விளம்பரத்திற்காக பேசுகிறார். அ.தி.மு.க.வை மேலும் வளர்க்க நாங்கள் பாடுபடுகிறோம். பா.ஜ.க.வை அவர்கள் வளர்க்கட்டும். பா.ஜ.க.வை காலுன்ற வைக்க அதிமுகவினர் சுமந்து செல்ல மாட்டோம். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் சூழலுக்கு ஏற்ப அ.தி.மு.க. செயற்குழு கூடி முடிவெடுக்கும். அதை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்துவார்கள் என்றார்.
மேலும், கோடநாடு பிரச்சனை என்பது எதிர்கட்சிகளின் ஒரு புனையப்பட்ட நாடகம். தீர்ப்பு வருகின்ற நாளில் திசைதிருப்பும் வகையில், அரசியல் சதிக்காக தவறான செய்தி மூலம் பிளேக் மெயில் செய்கிறார்கள். இதில் எந்த உண்மையும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றியை சீர்குலைக்க தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் முயற்சி எடுபடாது. தமிழக முதலமைச்சர் மீது அவதூறு கிளப்பும் கோடநாடு சதித்திட்டம் வெற்றி பெறாது. பஞ்சாயத்து தேர்தலை மனதில் கொண்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பஞ்சாயத்து, பஞ்சாயத்தாக செல்கிறார். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறாது. குட்கா, கோடநாடு என அ.தி.மு.க. மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி குளிர்காய்வதே தி.மு.க.வின் கொள்கையாகும்.
ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஏன் செல்கிறார்..? நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, யார் ஆட்சிக்கு வந்தாலும் மத்திய அரசில் அங்கம் வகிக்க வேண்டுமென தி.மு.க. முயல்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.