May 4, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் 7ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் இன்று மற்றும் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு உத்திரவிட்டுள்ளது. எனினும் வைரஸின் தாக்கம் பொறுத்து பல்வேறு மாவட்டங்களுக்கு
ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஊரடங்கு உத்திரவு அமல்படுத்தப்பட்டத்தில் இருந்து நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. இன்று டெல்லி,ஆந்திர,கர்நாடக மாநிலங்கள் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியளித்துள்ளன. இந்நிலையில்,தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தை ஒட்டியுள்ள ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு
தமிழக எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் அதிகளவில் செல்வதால்,மாநிலங்களுக்கு
இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டே டாஸ்மாக் திறக்கப்படுகிறது.நோய் பரவல் கட்டுப்பாட்டு பகுதியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது. மதுபானக்கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகிறது.
மேலும், பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்படாது
* மதுக்கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்
* 6 அடி தூர சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்
* மதுக்கடைகளில் ஒருநேரத்தில் 5 பேருக்கு மேல் கூட கூடாது
* காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் மதுக்கடைகளை திறக்க அனுமதி
* அனைத்து மதுக்கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்
* மதுக்கடையில் கூட்டத்தை தவிர்க்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க முடிவு
* டாஸ்மாக் பார்களுக்கு அனுமதி இல்லை, கடைகளுக்கு மட்டுமே அனுமதி
* ஏற்கனவே பகல் 12 முதல் இரவு 10 மணி வரை இருந்த நேரம் மாற்றம்