February 13, 2019
தண்டோரா குழு
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்ட மசோதாவை அமைச்சர் வேலுமணி பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான தடை அமலுக்கு வந்தது. அதன்பின்னர் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் முதல்முறை என்பதால் தடையை மீறியவர்களுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது.
எனினும், விதிகளை மீறுவோருக்கான தண்டனை மற்றும் அபராதம் குறித்த எந்த அறிவிப்பும் தமிழக அரசின் ஆணையில் இடம் பெற்றிருக்கவில்லை.இந்நிலையில் பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்காக அபராதம் மற்றும் தண்டனை விவரங்கள் அடங்கிய மசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். பிளாஸ்டிக் தடையை மீறினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி, முதல் முறை ரூ.25,000, 2வது முறை ரூ.50,000, 3வது முறை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம். அதைப்போல் பிளாஸ்டிக் சேமித்தல், வழங்குதல், கொண்டுசெல்லுதல், விற்பனை, பகிர்ந்தளித்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.