December 8, 2018 தண்டோரா குழு
தமிழகத்தில் ஆங்கில பெயர்களை குறிப்பிடும் ஊர்களின் பெயர் தமிழில் மாற்றப்பட உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 11ஆம் தேதி மகாகவி பாரதியாரின் 136வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் வானவில் பண்பாட்டு மையத்துடன் இணைந்து தேச பக்தி விழா என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் 4 நாட்கள் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்,
தமிழகத்தில் அரசு ஆவணங்களில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்ட ஊர் பெயர்களை தமிழில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 3 ஆயிரம் ஊர்களின் பெயர் ஆங்கிலத்தில் உள்ளது. இதனை தமிழ் பெயர்களாக மாற்றுவதற்கான அரசாணை இன்னும் ஓரிரு நாட்களில் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.