December 14, 2018
தண்டோரா குழு
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் தான் என திமுகவில் இணைந்த பிறகு செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தொண்டர்களை அரவணைத்துச் செல்பவரே உண்மையான தலைவர்; அந்த வகையில் மு.க.ஸ்டாலின் உண்மையான தலைவராக பார்க்கிறேன். ஸ்டாலின் மீதான ஈர்ப்பால், ஸ்டாலின் முன்னிலையில் அடிப்படை உறுப்பினராக திமுகவில் இணைத்துக்கொண்டேன்.
தொண்டர்களின் அரவணைப்பை பெற்றவராக ஸ்டாலினை பார்க்கிறேன். கரூர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப திமுகவில் இணைத்துக்கொண்டுள்ளேன். ஈபிஸ் -ஓபிஎஸ் ஆட்சி தமிழக மக்களுக்கு எதிரானது; மத்திய அரசின் அடிமை ஆட்சிக்கு எதிராக ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார்.
ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த திமுகவில் அடிபடை உறுப்பினராக இணைத்துக்கொண்டேன். எப்போது தேர்தல் வந்தாலும், அதிமுக ஆட்சி அகற்றப்பட்டு , ஸ்டாலின் தலைமையிலான திமுகவிற்கு வாக்களித்து, அடுத்த முதல் அமைச்சராக அவரை மக்கள் அமர வைப்பார்கள். நான் இருக்கின்ற இயக்கத்தில் அர்ப்பணிப்போடு பணியாற்றி இருக்கிறேன். இருளை அகற்றி ஒளி தரும் சூரியன், என் மனதில் இருந்த இருளை அகற்றி எனக்கு புதிய ஒளி தந்திருக்கிறார்கள்.
கரூர் மாவட்டத்தில் திமுக வெற்றிக்கு நிர்வாகிகளோடு இணைந்து பாடுபடுவேன். தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்றார்.
மேலும், நான் திமுகவில் இணைந்தது டிடிவி தினகரனுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கலாம். டிடிவி தினகரன் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தால் அது அரசியலில் மரபாக இருக்காது. தகுதி நீக்க வழக்கில் மேல் முறையீடு வேண்டாம், தேர்தலுக்கு செல்லலாம் என நான் தான் முதலில் சொன்னேன் என்றும் கூறியுள்ளார்.