July 13, 2019 தண்டோரா குழு
தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்ற மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மத்திய அரசு பணியில் சேர விடாமல் தடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு, தேர்வு முறைகளை மாற்றி மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு வேண்டுமென்றே குழப்பம் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இந்தி பேசாத மாநில மக்களும் இந்திய அரசின் பணியிடங்களில் அமர தகுதியானவர்கள் என்ற உரிமையை பா.ஜ.க. அரசு மறந்து விடக்கூடாது. கடந்த ஆண்டு தமிழில் நடைபெற்ற தபால்துறை தேர்வில், பீகார் உள்ளிட்ட வடமாநில மாணவர்கள் வெற்றி பெற்று வரலாறு காணாத முறைகேடு நடைபெற்றது. அதுகுறித்து இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல், தமிழில் தேர்வு எழுதுவது ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்த சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற்று, அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் மொழிகளின் சமத்துவத்தைப் போற்றும்வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மின்சார வாரியத்தில் வடமாநிலத்தவர்கள் வேலையில் சேர அதிமுக அரசை கட்டாயப்படுத்தி விதிகளை மாற்ற வைத்தது பாஜக அரசு. சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது பற்றி வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.