May 15, 2019
தன் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜை ஆதரித்து கடந்த ஞாயிற்றுகிழமை பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து; அவர் தான் நாதுராம் கோட்சே” என்று பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கமலின் இந்த கருத்துக்கு பாரதீய ஜனதா கட்சி, அ.தி.மு.க. மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையில், இந்து முன்னணி, கரூர் மாவட்டச் செயலர் ராமகிருஷ்ணன், ‘இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசிய, கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அரவக்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார்.
இப்புகாரின் அடிப்படையில், கமல் மீது, 153ஏ – மதத்தினர் இடையே கலவரம் ஏற்படுத்தும் வகையில், சர்ச்சைக்குரியபடி பேசுவது, 295ஏ – ஒரு குறிப்பிட்ட மதத்தினரை பற்றி பேசுவது ஆகிய பிரிவுகளில், அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, தன் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார்.