December 12, 2018
தண்டோரா குழு
சர்கார் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு, பிற்பகலில் அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான படம் சர்கார். இப்படம் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸானது. இப்படம் ரசிகர்கள் மத்திலும் வசூல் ரீதியாகவும் நல்ல சாதனை படைத்தது. ஆனால், இந்த படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் இலவச பொருட்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும் காட்சிகள் இருப்பதாக கூறி அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதுமட்டுமின்றி,பல தியேட்டர்களில் ‘சர்கார்’ படத்தின் பேனர்களை அ.தி.மு.க-வினர் கிழித்து போராட்டம் நடத்தினார்கள். இதனையடுத்து, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது.
இதற்கிடையில், இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கை ரத்து
செய்ய கோரி ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. மேலும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அனுமதி அளித்தார். இதைத் தொடர்ந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது.