May 18, 2019 தண்டோரா குழு
தனியார் பள்ளிகள் பாட புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் தவிர பிற பொருட்களை வாங்கும்படி நிர்பந்திக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாட புத்தகங்களுக்கு 5,000 ரூபாயும் சீருடைகள், காலணிகள், புத்தக பை, மதிய உணவுப் பைகளுக்கு 5,000 ரூபாயும் செலுத்த வேண்டும் என கோவை மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து, ஹேமலதா என்பவர் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தார். அவர் தனது மனுவில் 450 ரூபாய் விலையுள்ள புத்தகங்களை வழங்க தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ள நிலையில், 5,000 ரூபாய் விலையுடைய ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் புத்தகங்கள் வழங்கப்படுவதால் நடுத்தர பெற்றோர் பாதிக்கப்படுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாட புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் தவிர ஸ்கூல் பேக், லஞ்ச்பேக் போன்ற பொருட்களை கண்டிப்பாக வாங்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களை வற்புறுத்த கூடாது என தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை நீதிபதி, விசாரணையை ஜூன் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.