July 15, 2019
கோவையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவை மாநகர போலீசார் மூன்று இளைஞர்களின் வீடுகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் மத கலவரத்தை தூண்டும் விதமாக சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருவதாகவும் கோவையின் ஒரு சில பகுதிகளை சேர்ந்த இளைஞர்களின் வீடுகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவ்வப்போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் போலீசாரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை உக்கடம், குனியமுத்தூர், போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், இதேபோன்று சமூக வலைதளங்கள் மூலம் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கோவை கரும்புக்கடை அடுத்த சாரமேடு பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன், உக்கடம் ஜி எம் நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ பைசல், பீளமேடு அடுத்த சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பர்கான் உள்ளிட்ட 3 பேரின் வீடுகளில் உதவி ஆணையர்கள் தலைமையிலான தனிப்படை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சோதனையின் போது அவர்களின் வீடுகளில் உள்ள கணினி, லேப்டாப், செல்போன்கள், டைரிகள், பென்டிரைவ்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் எலக்ட்ரானிக் டிவைஸ் என்று சொல்லப்படும் ஆவணங்கள் சிலவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. சோதனையை அடுத்து மூன்று பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.