July 16, 2021
தண்டோரா குழு
தகுந்த உரிமம் இல்லாமல் துப்பாக்கி போன்ற ஆயுதம் வைத்திருப்பவர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் வாய்ப்புள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாக ரத்தினம் எச்சரித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் , துன்புறுத்தல்கள் போன்றவற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் பெண்களுக்கான உதவி மையம் கோவை மாநகர காவல்துறை சார்பாக துவங்கப்பட்டது. இதில், குழந்தைத் திருமணம் , குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் , பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் , பெண்களுக்கு எதிரான கொடுமைகள் போன்ற குற்றங்களை விசாரிக்கும் வகையில்,காவல்துறை சார்பாக பெண்களுக்கான பிரத்யேக உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக இந்த மையத்தில் குழந்தைகள் , பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து பெண் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.இந்த முகாமை கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தற்போது அவுட்டுக்காய் போன்ற வெடி பொருட்களால் தயாரிக்கப்படுபவர்கள் குறித்த தகவல்கள் இருந்தால் பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும். தகுந்த உரிமம் இல்லாமல் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் குறித்த தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்தால் காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும். தகவல் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என உறுதியளித்தார்.
தொடர்ந்து அவர் ஆயுத கலாச்சாரத்தை ஒழிக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்வதாகவும்,இது வரை எட்டு வழக்குகள் பதிய பெற று சுமார் 13 துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக தகுந்த உரிமம் இல்லாமல் ஆயுதம் வைத்திருப்பவர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்தார்.பயிற்சி முகாமில், மகளிர் காவல் ஆய்வாளர்கள் , உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.