July 19, 2018
தண்டோரா குழு
டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பான அறிக்கையை விஷ்ணுபிரியாவின் தந்தை ரவிக்கு தர,கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார்.உயரதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ குற்றவாளிகள் யாரும் இல்லை எனவும்,இவ்வழக்கை கைவிடுவது எனவும் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், விசாரிக்கப்பட்ட சாட்சிகள்,சிபிஐ அறிக்கை உள்ளிட்ட விவரங்களை ரவி கோரிய நிலையில், அவற்றை தருமாறு சிபிஐக்கு நீதிபதி நாகராஜ் உத்தரவிட்டார்.இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 9 ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.