May 30, 2020
தண்டோரா குழு
டிக் டாக்கில் பிரபலமாவதற்காக இளைஞர்கள் செய்த செயலால் வந்த வினை.ரூ.21 ஆயிரத்தை அபராதமாக செலுத்திய பரிதாபம் கோவையில் நடந்துள்ளது.
கோவை மாவட்டம் மெட்டுவாவியை சேர்ந்த குமார் (வயது 23), தமிழ்வாணன் (வயது 20), கார்த்திக் (வயது 18). மூவரும் நண்பர்கள்இவர்கள் மூவரும் சாலையில் அடிபட்டு இறந்த முயலை நாய்களுக்கு காட்டி டிக் டாக் வீடியோவை எடுத்துள்ளனர்.இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதுபற்றி அறிந்த வனத்துறையினர் கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் படி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது,மதுக்கரை வனச்சரகர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினரின் விசாரணையில் மெட்டுவாவியை சேர்ந்த குமார், தமிழ்வாணன், கார்த்திக் என்பது தெரிய வந்தது.
அவர்களை பிடித்த வனத்துறையினர் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டதில் மூவரும் சாலையில் இறந்து கிடந்த முயலை எடுத்து வந்து டிக் டாக்கில் டிரெண்டிங் ஆக வேண்டு மென்பதற்காக நாய்களிடம் காட்டி விளையாடியுள்ளது தெரிய வந்தது.இதையடுத்து, மூவருக்கும் ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்த வனத்துறையினர் அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து மதுக்கரை வனச்சரகர் சீனிவாசன் கூறுகையில்,
தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் வரும் வனவிலங்குகளை துன்புறுத்துவதோ, வேட்டையாடுவதோ,இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம்.அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.டிக் டாக்கில் பிரபலமாவதற்காக இவர்கள் செய்த செயலால் வனத்துறையினரிடம் வசமாக சிக்கி ரூ.21 ஆயிரத்தை இழந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.