November 10, 2018 தண்டோரா குழு
ஜெயலலிதாவின் உண்மையான பெயர் கோமளவல்லி கிடையாது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் சர்கார். இப்படம் தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. இதற்கிடையில், படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான சில கருத்துகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுகவை மறைமுகமாக சாடும் விதமாக நிறைய வசனங்கள் காட்சிகள் மற்றும் அதிமுகவின் திட்டங்கள் குறித்தும், மறைமுகமாக குறிப்பிடும் வகையிலும் சில காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. அதைபோல் படத்தில் வில்லி கதாப்பாத்திரத்திற்கு கோமளவள்ளி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஜெயலலிதாவின் இயற்பெயர் என சர்ச்சை எழுந்தது. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டன.
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ. தீபா, ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி இல்லை எனவும், ஜெயலலிதா பற்றி எனது தந்தைக்கு தான் நன்றாக தெரியும். அவரை என் தந்தை அம்மு என்றே செல்லமாக அழைப்பார். மைசூரில் பிறந்த அவருக்கு ஜெயா என்று தான் பெயர் சூட்டினார்கள் எனக் கூறியுள்ளார்.