January 30, 2019 தண்டோரா குழு
கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 21 மாத ஊதிய நிலுவை மற்றும் பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் கடந்த 22 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள அரசு அலுவலங்கள் மற்றும் பள்ளிகள் முடங்கின. இதையடுத்து தேர்வு நேரம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
எனினும் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திட்டவட்டமாக தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் பணிக்கு திரும்பாத ஆசிரியர் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அதில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தது. இதற்கிடையில், நேற்று ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 3520 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து, ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் கடந்த 9 நாட்களாக நடந்து வரும் போராட்டம், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில், பொதுமக்கள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.