March 30, 2019 தண்டோரா குழு
சோதனை மூலம் மிரட்டும் வேலை எங்களிடம் நடக்காது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் நேற்று இரவு திடீரென வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுப்பட்டுனர். அப்போது, துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் இருந்தனர். சுமார் 5.30 மணி நேரம் சோதனை நடத்திய அதிகாரிகள் 2 பைகளில் ஆவணங்களை எடுத்துச்சென்றனர்.
பின்னர் வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருன்,
எனது வீட்டில் சோதனை நடத்த வந்த அதிகாரிகள் மாற்றி மாற்றி பேசினர். இன்று அதிகாலை 3 மணியளவில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினார்கள். பின் திரும்பி சென்று விட்டார்கள்.வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்தின் வெற்றி பிரகாசமாக உள்ளது.பிரகாசமாக உள்ள வெற்றியை திசை திருப்பவே வருமான வரித் துறை சோதனை நடைபெற்றுள்ளது.தேர்தல் நேரத்தில் சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன?போன மாதம் எங்கள் வீட்டிக்கு வந்து சோதனை நடத்திருக்கலாமே.
எங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள திராணியில்லாமல் வருமான வரி துறை சோதனையை நடத்தி பூச்சாண்டி காட்டுகின்றனர். நாங்கள் மிசாவையே சந்தித்தவர்கள். சோதனை மூலம் மிரட்டும் வேலை எங்களிடம் நடக்காது. நாங்கள் அதற்கு பயப்பட மாட்டோம். தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் சோதனை நடத்துவதற்கான காலம் இதுவல்ல என கூறியுள்ளார்.