June 21, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மற்றும் தூய்மை பணிகள் நடைபெற்று வருவது குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் பொன்னையராஜபுரம் சுகாதார அலுவலக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி கமிஷனர், சுகாதார பணியாளர்களிடம் அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.
பின்னர் லீலா அபார்ட்மென்ட் சாலையில் பாலம் கட்டும் பணி, சாஸ்தா நகர் மற்றும் குறுக்கு வீதிகளில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார்சாலைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.தொடர்ந்து தெற்கு மண்டல பகுதிகளில் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனை, உடல் வெப்பநிலை பரிசோதனை, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் உடல் ஆக்சிஜன் அளவை கண்டறிதல் ஆகிய பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செல்வபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடப்பணிகளை மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது மாநகர பொறியாளர் லட்சுமணன், தெற்கு மண்டல உதவி கமிஷனர் சரவணன், மண்டல சுகாதார அலுவலர் லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.