April 4, 2018
தண்டோரா குழு
சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தால், ஆடுகளத்தில் நுழைந்து விளையாட்டு வீரர்களை சிறைபிடிப்போம் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், வரும் 7-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் எதிர் கொள்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின் சென்னை அணி ஐபிஎலில் விளையாடவுள்ளதால் சென்னை ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏப்.10இல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணிகள் விளையாடவுள்ளன. இப்போட்டி நடைபெற கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் ஏப்.10ம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெற்றால் ஆடுகளத்தில் நுழைந்து விளையாட்டு வீரர்களை சிறைபிடிப்போம் என நாகைஎம்எல்ஏவும் மனித நேய ஜனநாயக கட்சி பொது செயலாளருமான தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாளை நடக்கும் திமுகவின் முழு அடைப்பு போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவளிக்கும் என்றும் தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜக, வரும் நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்று தோல்வியுடையும் என்றும் தலைவர் தமிமுன் அன்சாரிகூறியுள்ளார்.