May 19, 2019
சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் 79.41% வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திருப்பரங்குன்றம்,அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் சராசரியாக 77.32% வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில்,அரவக்குறிச்சி தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் 84.28% வாக்குகள் பதிவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. சூலூர் 79.41%, திருப்பரங்குன்றம் 74.17%, ஒட்டபிடாரம் 72.61% வாக்கு பதிவாகியுள்ளது.
சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 22 பேர் போட்டியிடுகின்றனர்.சூலூர் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வீதம் 648 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 324 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 324 வி.வி.பேட் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம்) பயன்பாட்டில் வைக்கப்பட்டது. 324 வாக்குச்சாவடி மையங்களில் காலை முதல்
மக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றினர்.