May 19, 2019 தண்டோரா குழு
சூலூர் இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு 324 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 22 பேர் போட்டியிடுகின்றனர்.வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இதைத்தொடர்ந்து தேர்தல் அலுவலர்களால் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.சூலூர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்காளர்கள் உள்ளனர்.அவர்களில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 397 பேர் ஆண்கள்.1 லட்சத்து 49 ஆயிரத்து 743 பேர் பெண்கள்.மூன்றாம் பாலினத்தவர்கள் 18 பேர் உள்ளனர்.
பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சூலூர் தொகுதியில் 121 இடங்களில் 324 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 32 இடங்களில் உள்ள 45 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு துணை ராணுவத்தினர் 212 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சூலூர் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வீதம் 648 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 324 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 324 வி.வி.பேட் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம்) பயன்பாட்டில் உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்காக 324 சக்கர நாற்காலிகள் வாக்கு சாவடி மையங்கலில் வைக்கப்பட்டு உள்ளன. வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் மையம் எது என்பதை எளிதாக கண்டறிய ஏற்கனவே பூத் சிலிப்புகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினருடன், கூடுதலாக ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் 2 போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட மொத்தம் 191 வாக்குச்சாவடிகளில் ‘வெப்’ கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரடியாக பார்வையிட முடியும். வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு பணியாளர்கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து,இன்று காலை முதலே
சூலூர் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள்
வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.இதில் சூலூர் அதிமுக வேட்பாளர் கந்தசாமி அவர்கள் வதம்பச்சேரி உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார்.