April 26, 2019 தண்டோரா குழு
சூலூர் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் பொங்கலூர் பழனிச்சாமி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் மே மாதம் 19-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் தலைவர்களும், சுயேட்சைகளும் தொடர்ந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சூலூர் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். சூலூர் தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணனிடம் அவர் தனது மனுவை வழங்கினார். அப்போது, தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் எ.வ. வேலு, ஆதிபேரவை நிறுவனர் அதியமான், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பிரிமியர் செல்வம், சட்டத்துறை இணைச்செயலாளர் வழக்கறிஞர் பரந்தாமன், தி.மு.க. பிரமுகர் மன்னன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடுகின்றேன். தி.மு.க. சூலூர் தொகுதியில் கட்டாயம் வெற்றி பெறும்,” என்றார்.